கல்வியாண்டு துவக்கம் உற்சாக வரவேற்பு
உடுமலை: கல்வியாண்டின் முதல் நாளில், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, மாணவ, மாணவியரை, உற்சாகத்துடன் அரசுப்பள்ளிகளில் வரவேற்றனர்.
கோடை விடுமுறை முடிந்து, அரசுப்பள்ளிகளில், 2026–27ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நேற்று துவங்கியது.
முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு, பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டது.
நேற்று பள்ளிகள் திறந்ததும், மாணவ, மாணவியருக்கு, பாடப்புத்தகங்கள், நோட்டு, சீருடை, காலணி, வண்ண கிரையான் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
முதலாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளை, பள்ளி நிர்வாகத்தினர் இனிப்பு கொடுத்தும், பூ கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
உடுமலை நகரம், ஒன்றியம், குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வியாண்டின் முதல் நாளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.