பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை:

திருச்சியில் நடந்த நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அ.தி.மு.க., மீது நாலுகால் பாய்ச்சல் காட்டியிருப்பது அவரது தகுதியையும், தரத்தையும் உணர்த்துகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது. ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை, தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

தெருவுக்கு தெரு, 'டாஸ்மாக்' மதுபான கடைகளை திறந்து வச்சு, இளைஞர்கள் வாழ்க்கையை பாழாக்கிய அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளை விட பெரிய பாதிப்பு வேற இருக்குமா?




தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தமிழக வெற்றிக் கழக உறுப்பினருமான டாக்டர் சரவணன் அறிக்கை: மேகதாது அணை பிரச்னை குறித்து முதல்வர் விஜய், கடுமையான கண்டன குரல் எழுப்பி இருப்பதோடு, 'நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதமரிடமும் மனு வழங்கியுள்ளார். ஆனால், 'மேகதாது பிரச்னை பற்றி முதல்வர் பேசவில்லை' என, தி.மு.க., கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். முன்பு கர்நாடக துணை முதல்வராக இருந்த சிவகுமார், ஸ்டாலினை சந்தித்துவிட்டு, 'நிச்சயம் மேகதாது அணை கட்டுவேன்' என கூறியபோது, அதற்கு சிறு கண்டனத்தை கூட ஸ்டாலின் தெரிவிக்கவில்லை.

அப்ப, தி.மு.க., கூட்டணியில் காங்., இருந்ததால அடக்கி வாசித்தாங்க... இப்ப காட்சிகள் மாறிட்டதால, மேகதாது பிரச்னையை கிளப்பிவிட்டு, த.வெ.க., - காங்., கூட்டணியை உடைக்க பார்க்கிறாங்களோ?

த.வெ.க.,வில் இணைந்த எம்.ஜி.ஆர்., பேரன் ராமச்சந்திரன் பேட்டி: தமிழகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய் ஆட்சி தான் நடக்கும். அவர் சாதிப்பார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். முதல்வரானதும் ஜெயலலிதாவை தவிர யாரும் எம்.ஜி.ஆர்., வீட்டிற்கு வரவில்லை. பழனிசாமி கூட முதல்வராக இருந்தபோது வந்தது இல்லை. எனவே, முதல்வர் விஜய் ராமாவரம் தோட்டத்திற்கு வர வேண்டும் என, எம்.ஜி.ஆர்., குடும்ப உறுப்பினர்கள் விரும்புகிறோம்.

இவரது குடும்பத்தினர், முதல்வர் விஜயை இரண்டாவது எம்.ஜி.ஆராகவே பார்க்கிறாங்க போலும்!



திராவிட வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மல்லை சத்யா பேச்சு: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றுவது, என் அரசியல் குரு வைகோவின் நிலைப்பாடு. தற்போது நடந்துள்ள குரு பெயர்ச்சியால், பெட்டி, படுக்கையுடன் த.வெ.க., கூட்டணிக்கு செல்ல வைகோ தயாராகி விட்டார்.

அப்புறம் என்ன...? ஆளே இல்லாம காற்றாடிட்டு இருக்கிற தி.மு.க., கூட்டணியில் இவர் சேர்ந்துடலாமே!

Advertisement