அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40.70 லட்சம் மோசடி பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தீத்தாக்கிழவனுாரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 39, அரசு பஸ் டிரைவர். இவருக்கு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் 42, அறிமுகமானார். மனித உரிமை கழகத்தின் தொகுதி செயலாளராக இருப்பதாகவும் அரசு துறையிலும், அரசியல்வாதிகளிடமும் நல்ல பழக்கம் உள்ளதாகவும் சுந்தர்ராஜிடம் மாணிக்கம் கூறினார்.

இவரிடம் சுந்தர்ராஜ் அவரது மனைவிக்கு சத்துணவிலும், மைத்துனருக்கு ரயில்வேயிலும், மனைவியின் உறவினருக்கு பாரத வங்கிக்கிளையிலும் வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.

இதற்காக மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி 35, பைனான்ஸ் தொழில் செய்யும் தோத்தாம்பட்டியை சேர்ந்த உறவினர் ஜெயபால் 37, ஆகிய மூவரும் பல்வேறு தவணைகளில் ரூ.40.70 லட்சத்தை சுந்தர்ராஜிடம் இருந்து பெற்றனர்.

இவர்கள் போலி பணிநியமன ஆணை வழங்கி ஏமாற்றியதால், சுந்தர்ராஜ் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமாரிடம் புகாரளித்தார். இதை விசாரித்த போலீசார் ஏற்கனவே மாணிக்கம், ஜெயபால் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரியை நேற்று கைது செய்து நிலக்கோட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

Advertisement