பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
நமது நிருபர்
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களால் சிறார்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து வந்தார். எனவே அதை தடுக்க சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது.
அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கை, குழந்தைகளைத் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் மற்றும் மனநல அபாயங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்திற்குப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.
பிற நாடுகளில்...
ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடான மலேஷியாவில், 16 வயதுக்கு உட்பட்டோர், சமூக ஊடகங்கள் பயன்படுத்த, முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் இன்னும் அமலுக்கு வரவில்லை. நார்வே, சீனா, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தடை விதிப்பது பரிசீலனையில் உள்ளது.
இந்தியாவில் பத்து வயது சிறுவன் தனக்கு பதினெட்டு வயது என்று தவறான தகவல் கொடுத்து சமூக ஊடகங்களில் கணக்கு துவக்குகிறார்கள். இந்த சமூக ஊடகங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடே இல்லை. மக்களின் இனிமையான தனிமை தான் இவர்களுடைய முதலீடு. அதை பயன்படுத்தி விதவிதமான பதிவுகளால் மாணவர்களையும் வீட்டில் இருக்கும் பெண்களையும் கவர்ந்து விடுகிறார்கள். நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இப்போது அலுவலக நேரங்களில் பலர் இந்த சமூக ஊடகங்களைப் பார்த்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மாணவர்களின் முழு கவனமும் சமூக ஊடகங்களில் மேல் உள்ளது. படிப்பில் ஆர்வம் இல்லை. அலைபேசி கொடுக்கவில்லை என்றால் வீட்டில் தகராறு. வளர்ந்த பிள்ளையாக பெண் ஆண் இருவருமே இருந்தால் தாயை அடிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். சில பிள்ளைகள் சாப்பிட, படிக்க, பேச மறுக்கிறார்கள். அதனால் அலைபேசியை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பெற்றோர்கள் உள்ளாகிறார்கள். இது இப்போது மாணவர்களிடையே புற்றுநோய் போல இந்தியாவிலும் பரவி வருகிறது.