அசத்திய இளம் வீரர்கள்! போஸ்னியாவை துவம்சம் செய்தது ஸ்விட்சர்லாந்து

​லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'பி' லீக் ஆட்டத்தில், கடைசி 20 நிமிடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்விட்சர்லாந்து அணி 4-1 என்ற கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

​ஆட்டம் தொடங்கிய முதல் பாதியில் ஸ்விட்சர்லாந்து அணி பந்தை தன் வசமே வைத்திருந்தாலும், போஸ்னியா அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் திணறியது. ஸ்விஸ் வீரர்களின் கோல் போடும் முயற்சிகள் அனைத்தையும் போஸ்னியா வீரர்கள் முறியடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதியில், 74வது நிமிடத்தில், ஸ்விஸ் இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி, தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். 80வது நிமிடத்தில், போஸ்னியா வீரர் தாரிக், ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற, அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்விஸ் வீரர்கள் கோல் மழை பொலிந்தனர்.

84வது நிமிடத்தில், ரூபன் வர்காஸ் மற்றும் 90வது நிமிடத்தில் மன்சாம்பி ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க, ஸ்விட்சர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

​கூடுதல் நேரத்தில் (90+3 நிமிடம்) போஸ்னியா வீரர் எர்மின் மஹ்மிச் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். எனினும், ஆட்டத்தின் கடைசி வினாடியில் (90+7 நிமிடம்) ஸ்விஸ் கேப்டன் கிரானிட் ஜாகா, பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக கோலாக மாற்ற, ஸ்விட்சர்லாந்து 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

​இந்த வெற்றியின் மூலம் ஸ்விட்சர்லாந்து அணி குரூப் 'பி' பிரிவில் 4 புள்ளிகளுடன், 'ரவுண்ட் ஆப் 32' தகுதிக்கு மிக அருகில் சென்றுள்ளது.