தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் யுவராஜ், 35. இவரது மனைவி சுப்ரியா. இவர்களுக்கு கடந்த மாதம், 11ல் புதுச்சேரியிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து, 45 நாட்களேயான குழந்தைக்கு, திருவண்ணாமலை நாவக்கரை பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், சுகாதாரத்துறை செவிலியர் மூலம், கடந்த, 25ம் தேதி தடுப்பூசி போடப்பட்டது.


அன்றிரவு, 10:30 மணி வரை குழந்தை கண் விழிக்காமல் தொடர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக குழந்தையின் தந்தை யுவராஜ், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதால், குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே, குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement