அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு விருதையில் 22 பேர் மீது வழக்கு; 13 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 22பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், 13 பேரை கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம் புதுகாலனியை சேர்ந்தவர் ராசலிங்கம் மகன் அறிவழகன், 23. அ.தி.மு.க., பிரமுகர்.

இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் விருத்தாசலம் - சேலம் சாலை, மணலுார் மேம்பாலத்தில் பைக்கில் சென்றார்.

அப்போது, சேலத்தில் இருந்து, சிதம்பரம் நோக்கி சென்ற பொலிரோ கார் அறிவழகன் மீது மோதியது.

படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்தில் இறந்தார். காரில் இருந்த ஐவரில் மூவர் தப்பியோடிய நிலையில், மற்ற இருவரை போலீசார் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை புறகாவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அறிவழகன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி, ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கோ.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், கோகுல், வேதாசலம், அன்பரசன் உள்ளிட்ட 22பேர் மீது வழக்குப் பதிந்து, 13 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement