ஆவின் பால் பாக்கெட்டுகளை மொத்தமாக திருடும் கும்பல்

திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டு நிலையத்தில் இருந்து, மாநகரில் உள்ள ஆவின் முகவர்களுக்கு பாக்கெட் பால் சப்ளை செய்யப்படுகிறது.

திருச்சி மாநகர பகுதியில் உள்ள முகவர்களுக்கு, தினமும் வேன்கள் வாயிலாக கொண்டு செல்லப்படும் பால் பாக்கெட்டுகள், முகவர்கள் பால் விற்பனை செய்யும் இடங்களில், அதிகாலை, 2:00 மணியில் இருந்து டிரேயுடன் இறக்கி வைக்கப்படும்.

காலை, 5:00 மணிக்கு மேல், முகவர்கள் பால் பாக்கெட்டுகளை எடுத்து, வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.

சில நாட்களாக பால் விற்பனை செய்யும் இடங்களில், வேன்களில் இருந்து இறக்கி வைத்து விட்டுச் செல்லும் பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருடு போனது.

மூன்று நாட்களுக்கு முன் சுப்பிரமணியபுரத்திலும், மறுநாள் தென்னுாரிலும், நேற்று முன்தினம் பீமநகர் பகுதியிலும் முகவர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருடப்பட்டுள்ளன.

திடீரென பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருடு போவதை கண்டு அதிர்ச்சியடைந்த முகவர்கள், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, டூ வீலர்களில் வரும் மர்ம நபர்கள் பால் பாக்கெட்டுகளுடன் டிரேயை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

போலீசார் விசாரணை நடத்தி, பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களை கைது செய்ய ஆவின் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார்படி, மாநகர போலீசார், கேமரா காட்சிகளை கொண்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement