மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை,: வால்பாறை மலைப்பாதையில் கொண்டைஊசி வளைவுகளிடையே வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இது தவிர வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதியில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. மாநில வனவிலங்கான வரையாடுகள் ஆபத்தை உணராமல், ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். ஆழியாறு - அட்டகட்டி இடையே கொண்டைஊசி வளைவுகளுக்கு மத்தியில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, செல்பி எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement