மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்துங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

பொள்ளாச்சி: 'மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்,' என, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி அறிக்கை:

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், 750 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், நடப்பாண்டு கோமங்கலம், கோமங்கலம்புதுார், கூளநாயக்கன்பட்டி கிராமங்களில், 400 ஏக்கரில் விதைப்பு மேற்கொண்டு வளர்ச்சி நிலையில் மக்காச்சோள பயிர்கள் உள்ளன.

மக்காச்சோளத்தில் கடந்த சில ஆண்டுகளாக படைப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதனால், மகசூல், 50 சதவீதத்துக்கு மேல் குறையும் வாய்ப்புள்ளது.இப்படைப்புழுவால் மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

படைப்புழுவானது ஆறு நிலைகளை கொண்டது. இளம் பழு பருவம், கருப்பு தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிற புள்ளிகளும் தென்படும்.

புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது, இலையின் அடிப்பகுதியில் மறைந்து பாதிப்பை உண்டாக்கும்.தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில், 1,500 - 2,000 மூட்டைகளை குவியலாக இடுகிறது. இலையின் அடிப்பகுதியில் இடும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம் புழுக்கள் நுாலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும்.

இளம் செடிகளில் குருத்து மற்றும் இலை உறைகளையும், முதிர்ந்த செடியில் கதிரின் நுாலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை



உழவு செய்த பின், கடைசி உழவில், ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல், 19.8 பிளஸ் தியோமெத்தாக்சம், 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஊடுபயிராக, வரப்பு பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை பயிர் செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணிக்க கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை ஒரு ஏக்கருக்கு, 5 என்ற எண்ணிக்கையில் நிறுவ வேண்டும்.

பயிரின், 15 - 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல், 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமை, 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.

பயிரின், 35 - 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியம், அனிசோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை, ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

அதன்பின், எமாமெட்டின் பென்சோயேட் அல்லது நவலுாரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

மருந்து தெளிப்பு



காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து மருந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், ஒருமுறை தெளிந்த மருந்தை மறுமுறையும் பயன்படுத்தக்கூடாது.

கைத்தெளிப்பான், பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்கலாம்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement