லாட்ஜில் துப்பாக்கியுடன் தோட்டா மர்ம நபரை பிடிக்க இரு தனிப்படை

ஈரோடு: ஈரோடு, சத்தி சாலையில் ஆர்.ஆர்., லாட்ஜ் அறை ஒன்றில் செப்., 25ம் தேதி மாலை படுக்கை தலையணைக்கு அடியில் இருந்து ஒரு துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் ஈரோடு டவுன் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.


அறை எடுத்து தங்கிய நபர் சுரேந்திரன், 42, கான்பூர், உத்தரபிரதேச மாநிலம், என்ற பெயரில் தங்கி உள்ளார். முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை பெற்று, ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


துப்பாக்கியை தோட்டாவுடன் தவற விட்ட நபர், மீண்டும் அறைக்கு வந்து அவற்றை எடுத்து செல்ல வருவார் என்பதால், போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஆனால், இதுவரை யாரும் துப்பாக்கி, தோட்டாக்களை பெற்று செல்ல வரவில்லை. குற்ற செயலில் ஈடுபடுவதற்காகவே தோட்டாவுடன் துப்பாக்கியை, மர்ம நபர் கொண்டு வந்தது உறுதியாகி உள்ளது.


போலீசார் கூறுகையில், 'துப்பாக்கியை விட்டு சென்ற நபரை பிடிக்க, ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், வெப்படையில் பிடிபட்ட மேவாட் கொள்ளை கும்பலுக்கும், துப்பாக்கியை தவற விட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.

Advertisement