லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 105 பேர் பலி; 350 பேர் காயம்

8


பெய்ரூட்: லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நடத்திய தாக்குதலில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.


இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்தது.


இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க லெபனான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கி விட்டனர். எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.



ஏமனிலும் இஸ்ரேல் தாக்குதல்




ஹமாஸ் படையினருக்கு எதிரான போர் துவங்கி 9 மாதங்களுக்கு பிறகு ஜூலை 21ம் தேதி முதல் முறையாக, ஏமனில் பல ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது ஏமனில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது.


ஏமனில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.

Advertisement