காவிரி உபரிநீர் திட்டம்; கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற கேட்கிறார் அன்புமணி!

2

சென்னை: காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்.,2ல் தர்மபுரி மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுமாறு பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.



அவரது அறிக்கை:

வறண்ட, வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் தர்மபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தர்மபுரி, காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டி.எம்.சி மட்டுமே நீர் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி., காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தர்மபுரி மாவட்டம் வளம் பெறும்.

தர்மபுரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2014ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்தத் திட்டத்தை நான் தயாரித்தேன். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அன்றைய முதல்வர் இ.பி.எஸ்., இடம் வழங்கினேன். இன்றைய முதல்வர் ஸ்டாலினிடமும் இத்திட்டம் குறித்து பலமுறை வலியுறுத்தினேன்.

ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2022 ஆகஸ்ட் 19ம் தேதி ஒகேனக்கல்லில் தொடங்கி பாப்பிரெட்டிபட்டி வரை 3 நாட்கள் எனது தலைமையில் மிகப்பெரிய எழுச்சிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், பல நூறு கோடியை வீணாக செலவழிக்கும் தி.மு.க., ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது.

இத்தகைய சூழலில் தான் தர்மபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 4ம் தேதி தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க., அழைப்பு விடுத்திருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரும் வகையிலும் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.,வினரும், மக்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Advertisement