கோப்பை வென்றது இந்தியா: தெற்காசிய கால்பந்தில் ஆதிக்கம்

திம்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) பைனலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2-0 என வங்கதேசத்தை வீழ்த்தி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது.

பூடானில், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 9வது சீசன் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன. பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 58வது நிமிடத்தில் முகமது கைப் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) முகமது அர்பாஷ் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய வங்கதேச அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி, யூத் பிரிவில் 6வது முறையாக (2013, 2017, 2019, 2022, 2023, 2024) தெற்காசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisement