திண்டுக்கல்லில் வங்கி ஊழியர் வீட்டில் கைவரிசை! பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.



திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் மகாராஜா நகரை சேர்ந்தவர் வினோதன் 35. இவர் தனியார் வங்கியில் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார். இந் நிலையில் வினோதன், செப்.28ல் திண்டுக்கல்லில் உள்ள தன் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் சொந்த ஊரான வடமதுரைக்கு சென்றார்.

வினோதனின் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்தனர். சொந்த ஊரில் இருந்து வினோதன், குடும்பத்தோடு திண்டுக்கல்லில் உள்ள தமது வீட்டிற்கு வந்தார். அப்போது கதவுகள் திறக்கப்பட்டு பீரோவிலிருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பணம் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதா, அதோடு சேர்ந்து நகைகளும் கொள்ளை போனதா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement