கல்வித்துறை இணை இயக்குனர் எனக்கூறி ரூ.1.11 கோடி மோசடி

தேனி: கல்வித்துறை இணை இயக்குனர் என பொய் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.11 கோடி மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தேனி பழனிசெட்டிபட்டி கனகதுர்காவை 36, போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த இன்ஜினியர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், எனது அக்கா திவ்யா, அவருடைய தோழி செல்வராதாவிடம் பழனிசெட்டிபட்டி கனகதுர்கா, தான் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாகவும், பணம் கொடுத்தால் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும்,' கூறியுள்ளார்.

இதனை நம்பிய அவர்களும் எனது நண்பர்கள் இஜாஜ் அகமது, பாண்டி, பாலஸ்ரீகோகுல் அரசு வேலைக்காக கனகதுர்காவின் வங்கிக்கணக்கில் ரூ.33 லட்சம் செலுத்தினர். அதுபோல் இ.புதுப்பட்டியை சேர்ந்த ஒச்சு என்ற சூர்யா, கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த சரண்யா சேர்ந்து 26 பேரிடம் ரூ.78 லட்சத்து 21 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்று, வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கனகதுர்கா, ஒச்சு என்ற சூர்யா, சரண்யா மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஒச்சு என்ற சூர்யாவை போலீசார் ஏப்.,6ல் கைது செய்தனர். பி.எட்., பட்டதாரியான கனகதுர்காவை திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நேற்று கைது செய்னர்.

Advertisement