மதுரையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை; மதுரை, ரிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு, நேற்று காலை 'இ-மெயில்' அனுப்பப்பட்டிருந்தது. அதில் 'செப்., 30 மதியம் 12:00 மணிக்குள், மாணவர்களை வெளியேற்றி விடுங்கள். குண்டு வைக்கப்பட்டுள்ளது' என மிரட்டப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல, பைபாஸ் ரோடு, நாகமலை -- புதுக்கோட்டை பகுதி தனியார் பள்ளிகளுக்கும், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதை அறிந்த பெற்றோர், கே.வி. பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை உடனடியாக வெளியேற்றும்படி வலியுறுத்தினர்.

பள்ளி தரப்பில், 'சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பயப்பட வேண்டாம். தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் மாணவர்களை அனுப்பி விடுகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.

பின் மதியம் 12:00 மணிக்கு, மாணவர்கள் அனைவரும் பள்ளி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மிரட்டல் விடுத்த நபர் குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர். மிரட்டல் விடுத்தவரின் 'ஐடி' உள்ளிட்ட விபரங்களை தருமாறு இ - மெயில் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.

Advertisement