அடகு கடையில் 300 சவரன் கொள்ளையிட்ட இருவர் கைது

மதகுப்பட்டி : சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டி அருகே சிங்கினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மதகுப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, தச்சம்புதுப்பட்டி ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். ஜூன் 8ம் தேதி இரவு, கடைக்கு வாட்ச்மேன் வரவில்லை.

இதை பயன்படுத்திய நபர்கள், கடையின் பக்கவாட்டு சிமென்ட் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து, அங்கிருந்த லாக்கரை உடைத்து, அதில் இருந்த 300 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து தப்பினர். பாண்டித்துரை மதகுப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

தனிப்படையினர் நான்கு மாதங்களாக பல இடங்களில் முகாமிட்டு கொள்ளையரை தேடினர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் பகுதியில் இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.

இந்த குற்றத்தில், ஏழு பேர் ஈடுபட்டதாக, கைதானவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இப்போது இருவர் சிக்கியுள்ளனர். மீதமுள்ளவர்களும் பிடிபட்ட பின்தான், கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு நகை என்ற விபரம் தெரிய வரும்.

Advertisement