துப்பாக்கியை துடைக்கும் போது டுமீல்; பிரபல பாலிவுட் நடிகர் மீது குண்டு பாய்ந்தது!

6

மும்பை: கைத்துப்பாக்கியை துடைக்கும்போது தவறுதலாக வெடித்ததில் பிரபல நடிகர் கோவிந்தா காலில் குண்டு பாய்ந்தது.



பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் கோவிந்தா. தமிழில் நடிகைகள் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்த த்ரீ ரோசஸ் படத்தில் நடித்தவர். அந்த படத்தில் இடம்பெற்ற மெய்யானதா, பொய்யானதா பாடல் மிகவும் பிரபலம்.

அவரின் நடன அசைவுகளுக்காக இப்பவும் அந்த பாடலை ரசித்து பார்ப்பவர்கள் உண்டு. பாலிவுட்டில் ஏராளமான ரசிகைகளை கொண்ட இவர் சிவசேனாவில் உள்ளார்.

இந் நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் நடிகர் கோவிந்தா தனது கைத்துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது விரல் ட்ரிக்கரில் பட்டுவிட, துப்பாக்கியில் இருந்து தோட்டா ஒன்று சீறி பாய்ந்துள்ளது. காலில் குண்டுபாய்ந்த நிலையில் நடிகர் கோவிந்தா அலறி துடித்துள்ளார்.

அவரின் சத்தம் கேட்ட அங்குள்ளவர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் துப்பாக்கியுடன் சாய்ந்து கிடந்த கோவிந்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

தகவலறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருக்கும் கைத்துப்பாக்கிக்கு உரிய உரிமம் உள்ளது, சம்பவம் குறித்து இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர்.

Advertisement