டெலிவரி ஏஜென்டை கொன்றது ஐபோன் மோகம்: லக்னோவில் கொடூர சம்பவம்

லக்னோ: ஐபோனை ஆர்டர் செய்த நபர், அதை டெலிவரி கொடுக்க வந்த நபரை கொன்ற சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இப்போது எல்லா பொருட்களும் ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக ஓரிடத்தில் இருந்து கொண்டே விரும்பியதை நாம் விரும்பிய இடத்துக்கே கொண்டு வந்து தரும் வகையில் வசதிகள் வந்துவிட்டன. அப்படி ஒரு இளைஞர் ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்து அதை கொடுக்க வந்த நபரை கொன்று ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு; சின்ஹாட் பகுதியில் வசிப்பவர் கஜனன். இவர் ஆன்லைனில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றை cash on delivery என்ற முறையில் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அந்த போனை டெலிவரி செய்ய பரத் சாஹூ என்பவர் கஜனன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந் நிலையில் டெலிவரி நபரான பரத் சாஹூ வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது கஜனன் வீட்டுக்கு வந்து சென்ற பின்னர், பரத் சாஹூ மாயமாகி உள்ளார் என்பதை உறுதி செய்தனர்.

சந்தேகம் கொண்ட போலீசார் கஜனனையும், அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் ஐபோன் டெலிவரி கொடுக்க வந்தபோது பரத் சாஹூவை தாக்கி கொன்றுவிட்டு, பின்னர் சடலத்தை அருகில் உள்ள கால்வாயில் வீசியது தெரிந்தது.

இதையடுத்து, தீயணைப்புத்துறை உதவியுடன் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கஜனன், ஆகாஷ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக அவர் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement