ரகானே, ஸ்ரேயாஸ் அரைசதம்: இரானி கோப்பையில் அபாரம்

லக்னோ: இரானி கோப்பையில் மும்பையின் ரகானே, ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் அரைசதம் கடந்தனர்.

உ.பி.,யின் லக்னோவில், இரானி கோப்பை கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதில் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. மைதான ஈரப்பதாம் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு முகேஷ் குமார் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' பிரித்வி ஷா (4), ஹர்திக் தாமோர் (0), ஆயுஷ் (19) வெளியேறினர். மும்பை அணி 37 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த கேப்டன் அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இருவரும் அரைசதம் விளாசினர். நான்காவது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது யாஷ் தயால் பந்தில் ஸ்ரேயாஸ் (56) அவுட்டானார்.
அடுத்து வந்த சர்பராஸ் கான், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 237 ரன் எடுத்திருந்தது. ரகானே (86), சர்பராஸ் கான் (54) அவுட்டாகாமல் இருந்தனர். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட் சாய்த்தார்.

Advertisement