கிடப்பில் போடப்பட்ட சாலை நெமிலிச்சேரியில் தொடரும் அவதி

நெமிலிச்சேரி, ஆவடி அடுத்த நெமிலிச்சேரி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இங்கு, ஏழு மற்றும் எட்டாவது வார்டுகளை இணைக்கும் இந்திரா நகர், தேவி நகர் வழியாக, தினமும் 500 க்கும் மேற்பட்டோர், திருநின்றவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேற்கூறிய பகுதி, பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது. கடந்த ஏழு மாதத்திற்கு முன், தார் சாலை அமைக்க கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது. அதன் பின், பல மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், கற்களில் தடுமாறி விழுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், பருவ மழைக்கு முன் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement