ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வருமானம்.. இந்திய டெவலப்பர்களுக்கு கூகுள் தரும் ஜாக்பாட்!

1

புதுடில்லி: கூகுள் பிளே மூலம் இந்திய டெவலப்பர்கள் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வரை சம்பாதிக்கின்றனர் என்று கூகுள் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி ரோமா தத்தா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கூகுளின் 10வது பதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில், நாட்டின் வளர்ச்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து கூகுள் இந்திய தலைமை அதிகாரி ரோமா தத்தா சோபே பேசியதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மீதே எங்கள் நிறுவனத்தின் மொத்த கவனமும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்தபிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.


மேலும் விவசாயம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளின் வளர்ச்சி குறித்தும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சியில் ஏ.ஐ., பெரும் பங்கு வகிக்கும்.


இளம் சிறுவர்கள் ஏ.ஐ., குறித்த திறனை வளர்த்து கொள்வதற்காக 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. தற்போது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் தமிழ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளிலும் தயார் செய்யப்பட்டு விடும்.


செயலிகளுக்கான வருவாயை குறைத்த கூகுளின் முடிவுக்கு இந்திய டெவலப்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுக்கள் நடந்து வருகின்றன. கூகுள் பிளே மூலம் இந்திய டெவலப்பர்கள் ஆண்டுக்கு ரூ.4,000 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர், எனக் கூறினார்.

Advertisement