கூலி தொழிலாளி தற்கொலை; வங்கிகள், நிதி நிறுவன அதிகாரிகள் 4 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வங்கிகள், நிதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி.45. கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப தேவைக்காக மயிலாடுதுறையில் உள்ள வங்கிகளில் குழு கடன் பெற்று மாதத் தவணை கட்டி வந்துள்ளார்.


விபத்தில் முனுசாமி காயமடைந்ததால், கடனுக்கான மாத தவணையை செலுத்த முடியவில்லை. அவரது வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.


இது தொடர்பாக விசாரணை நடத்திய குத்தாலம் போலீசார், ஸ்ரீராம் பைனான்ஸ் மேலாளர் சுபாஷ்,28, ஹெச்.டி.எப்.சி. வங்கி மேலாளர் பிரபாகரன்,34, ஐ.டி.எப்.சி. வங்கி துணை மேலாளர் அஜித்குமார், 28, ஐ.டி.எப்.சி. ரிலேஷன்ஷிப் மேலாளர் கீர்த்திவாசன், 21, ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Advertisement