சாதிப்பாரா பாண்ட்யா: வங்கதேச 'டி-20' தொடரில்

புதுடில்லி: வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' தொடரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. 'டி-20' தொடரின் முதல் போட்டி குவாலியரில் நாளை நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் டில்லி (அக். 9), ஐதராபாத்தில் (அக். 12) நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார். இவர் 'வேகத்தில்' அசத்தினால் இரண்டு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்), ஹர்திக் பாண்ட்யா (86) உள்ளனர். வங்கதேச தொடரில் பாண்ட்யா, இன்னும் 5 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில் புவனேஷ்வர் குமாரை முந்தி முதலிடம் பிடிக்கலாம். இத்தொடரில் பாண்ட்யா 11 விக்கெட் வீழ்த்தினால், 'டி-20'யில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலராகலாம். முதலிடத்தில் சகால் (96 விக்கெட்) உள்ளார்.

தவிர, இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 'டி-20' போட்டியில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் வரிசையில் இந்தியாவின் சகால் (9 விக்கெட் ) முதலிடத்தில் உள்ளார். பாண்ட்யா (6 விக்கெட்) 7வது இடத்தை அஷ்வினுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பாண்ட்யா இன்னும் 4 விக்கெட் கைப்பற்றினால் இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றலாம்.


'டாப்-5' பவுலர்
சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக விக்கெட் சாய்த்த 'டாப்-5' இந்திய பவுலர்.
வீரர் போட்டி விக்கெட்
சகால் 80 96
புவனேஷ்வர் 87 90
பும்ரா 70 89
பாண்ட்யா 102 86
அர்ஷ்தீப் 54 83

Advertisement