36 நக்சல்கள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி

தாண்டேவாடா, சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 36 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபூஜ்மத் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், எல்லை பாதுகாப்பு படையினர் உட்பட மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 36 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

தாக்குதல் சம்பவம் அரங்கேறிய சுற்றுவட்டார பகுதிகளில், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை, 192 நக்சல்களை சுட்டுக்கொன்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement