வாலிபர் காதல் திருமணம் தந்தை மீது தாக்குதல்

விஸ்வநாதபுரா: காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தையை கடத்திச் சென்று தாக்கியதாக, சிறுமி வீட்டார் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. புகாரை வாங்க மறுப்பதாக, போலீசார் மீது புகார் எழுந்துள்ளது.

பெங்களூரு ரூரல் விஸ்வநாதபுரா அருகே கெம்பதிம்மனஹள்ளி கிராமத்தின் குருகிரண், 23; தனியார் நிறுவன ஊழியர். இவரும், கல்லுாரி மாணவியான 17 வயது சிறுமியும் காதலித்தனர். வேறு ஜாதி என்பதால், காதலி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

சில தினங்களுக்கு முன்பு, குருகிரணும், காதலியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். பின், இருவரும் தலைமறைவானார்.

இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், மகளையும், குருகிரணையும் தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு குருகிரண் வீட்டிற்கு சென்ற சிறுமியின் பெற்றோர், குருகிரண் தந்தை ராமண்ணா என்பவரை பிடித்துத் தாக்கினர்.

அவரை காரில் கடத்திச் சென்று, அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல் மகன், மருமகள் இருக்கும் இடம் பற்றி, ராமண்ணா கூறினார். அங்கு சென்றவர்கள், குருகிரணை தாக்கிவிட்டு, மகளை காரில் மீட்டு வந்தனர். இதுகுறித்து விஸ்வநாதபுரா போலீசில் புகார் அளிக்க குருகிரண் சென்றார். புகார் வாங்க போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது.

“சிறுமியை திருமணம் செய்ததற்காக என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் என் தந்தையை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர்,” என, குருகிரண் குற்றஞ்சாட்டினார்.

Advertisement