மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்தவர் கைது

சேலம்: சேலம், அழகாபுரத்தில் சாலையோரம், நேற்று முன்தினம் மாலை, 16 வயதான பிளஸ் 1 மாணவி, மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சோதனை செய்ததில், மது போதையில் இருந்ததும், பாலியல் சீண்டல் எதுவும் நடக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

அழகாபுரம் போலீசார் விசாரணையில், டூவீலரில் மாணவியை அழைத்து வந்து சாலையோரம் ஒருவர் இறக்கிவிட்டு சென்றது தெரிந்தது. இது தொடர்பாக ராமன்குட்டையை சேர்ந்த கோவிந்தசாமி, 36, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பழைய இரும்பு கடை வைத்துள்ள கோவிந்தசாமிக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். வேறொரு இரும்பு கடையில் வேலைக்கு வந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள காட்டு பகுதிக்கு, சிறுமியை அழைத்து சென்ற கோவிந்தசாமி, மது கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார். போதை அதிகமாகி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை டூவீலில் ஏற்றி வந்து சாலையோரம் இறக்கி சென்றுள்ளார். கோவிந்தசாமி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement