ரூ.3,000க்காக நடந்த தகராறு 2 நண்பர்களை கொன்றவர் கைது

குடகு: பணம் தொடர்பாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு, இருவரின் கொலையில் முடிந்தது.

குடகு, குஷால் நகரின் மங்களூரு கிராமத்தின், பசவேஸ்வரா லே அவுட்டில் வசிப்பவர் ஜோசப், 58. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கிரிஷ், 29. சுந்தர நகரில் வசிப்பவர் வசந்த், 36. இவர்கள் பல ஆண்டுகளாக, சேர்ந்து வேலை செய்கின்றனர்.

வீடு வீடாக சென்று வெல்டிங் வேலை செய்வர். கிடைக்கும் ஊதியத்தை மூவரும் பங்கிட்டு கொள்வது வழக்கம். பணிக்கு சென்று வருவதற்காகவே ஜோசப், ஆட்டோ வாங்கினார். அதே ஆட்டோவில் மூவரும் சென்று பணிக்கு சென்றனர்.

சில மாதங்களாக பணம் விஷயமாக ஜோசப், கிரிஷ் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. கிரிஷ், ஜோசப்புக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், 15 நாட்களாக ஜோசப்புடன் பணிக்கு செல்வதை, கிரிஷ் நிறுத்தினார்.

நேற்று முன்தினம் மதியம், பணத்தை கொடுக்கும்படி ஜோசப் கேட்டு உள்ளார். அவரும் தருவதாக கூறினார். இரவு 7:30 மணியளவில், பணி முடிந்த பின் ஜோசப்பும், வசந்தும் ஆட்டோவில் தங்கள் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது கடை அருகில் இருந்த மோகன் என்பவரிடம் பேசுவதற்காக, ஜோசப் ஆட்டோவை நிறுத்தினர். இதே வேளையில் அங்கிருந்த கிரிஷ், ஜோசப்பை தகாத முறையில் சைகை காட்டி கிண்டல் செய்தார். கோபமடைந்த அவர், கிரிஷை உதைத்து விரட்டினார்.

அதன்பின் ஆட்டோவை தன் வீட்டருகில் நிறுத்தினார். கிரிஷ் கோடாரியுடன் பின் தொடர்ந்து வந்ததை, ஜோசப் கவனிக்கவில்லை. அவர் வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது, கோடாரியால் அவரை வெட்டினார். அவரை காப்பாற்ற வந்த வசந்தின் மண்டையிலும் தாக்கினார்.

இதை பார்த்த அப்பகுதியினர், கிரிஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோடாரியால் வெட்டுப்பட்ட ஜோசப், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வசந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கிரிஷ் ஏற்கனவே, கஞ்சாவுக்கு அடிமையானவர். இதற்கு முன் பலரை கத்தியால் குத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. குஷால் நகர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement