மனைவியை கொன்ற கணவர் கைது 

கலபுரகி: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், செங்கல்லால் அடித்து மனைவியை கொன்ற, கணவர் கைது செய்யப்பட்டார்.

கலபுரகி ரூரல் ஷஹாபாத்தை சேர்ந்தவர் வக்கீல் ரத்தோட், 36. இவரது மனைவி பிரியங்கா, 35. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஷஹாபாத்தில் உள்ள செங்கல் சூளையில் தம்பதி வேலை செய்தனர். அப்பகுதியில் குடிசை அமைத்து வசித்தனர். தினமும் வேலை முடிந்ததும், கணவன், மனைவி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு விஷயத்துக்காக, சண்டை ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

கோபம் அடைந்த வக்கீல் ரத்தோட், செங்கலை எடுத்து, பிரியங்கா தலையில் அடித்தார். ரத்தவெள்ளத்தில் அவர் இறந்தார். பின், குடிசைக்கு சென்று கணவர் துாங்கி விட்டார். நேற்று காலை, அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement