தேர்தல் பத்திரங்கள் திட்டம்: மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

5

புதுடில்லி: மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.


தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை 2017 ல் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்பு பணத்தை தடுக்கலாம் என்பதால் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அவர் கூறினார். தேர்தல் பத்திரங்கள் 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என ஐந்து மதிப்புகளில் தயாரிக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே அவை விற்கப்படும் என்றும் ஜெட்லி கூறியிருந்தார்.


தனிநபர்களோ கம்பெனிகளோ பத்திரங்களை வாங்கி அவர்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அதை பெற்றுக் கொள்ளும் கட்சி 15 நாட்களுக்குபின் அதை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த கட்சியின்கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.


தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா,, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொது மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிரானது . தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.


இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திறந்தவெளி நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த கோரியும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், '' மறு சீராய்வு மனுவை ஆய்வு செய்ததில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் 2013ம் ஆண்டு விதிப்படி, மறு சீராய்வு தேவையில்லை. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என உத்தரவிட்டனர்.

Advertisement