பாகிஸ்தான் பயணத்தில் இப்படித்தான் இருப்பேன்; ஜெய்சங்கர் உறுதி!

2


புதுடில்லி: "பாகிஸ்தான் செல்வது, இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவதற்கு அல்ல; அது பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி," என வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த 2001ல் நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மாநாடு வரும் 15, 16ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

பாகிஸ்தானில் மாநாடு






இது தொடர்பாக, டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், இம்மாத மத்தியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறேன். நான், பாகிஸ்தான் செல்வது, இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவதற்கு அல்ல; அது பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் பதட்டமான தன்மை காரணமாக, ஊடகங்களுக்கு எனது பயணம் குறித்து நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.
இது பல நாடுகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. நான் இந்த அமைப்பில் நல்ல உறுப்பினராக இருப்பேன், கண்ணியமான நபராக, அதற்கேற்ப நடந்து கொள்வேன். பாகிஸ்தானில் உச்சி மாநாடு நடப்பதால், எனது பயணத்தின் தன்மை மாறுபாடு அடையாது.


கண்ணியமாக இருப்பேன்





இந்த மாநாட்டிற்கு செல்லும் நீங்கள், என்ன செய்யப் போகிறீர்கள், என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என நீங்கள் கேட்கலாம். நான் தெளிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்.
உக்ரைனில் நடக்கும் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் ஸ்திரமின்மைக்கான பெரிய காரணிகள், கவலைக்குரிய பெரிய காரணிகள் என்று நேர்மையாக கூறுவேன்.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement