சிலவரி செய்திகள்: சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம்
ஒரே நாளில் 1 அடி சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து குறைந்து பாசன நீர்திறப்பு அதிகரித்தது. இதனால் படிப்படியாக நீர்மட்டம் சரியத்தொடங்கியது.
நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 8,268 கனஅடியாக இருந்தது. அதேநேரம் அணையில் இருந்து வினாடிக்கு, 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கேற்ப நேற்று முன்தினம், 93.40 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 92.84 அடியாக சரிந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி சரிந்தது.
விபத்தில் தொழிலாளி பலி
மனைவி, மகள் படுகாயம்
ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தகரை ஊராட்சி, மூணாங்கன்னி குட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 31. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுதமி, 25, மகள் ஆசஸ்ரீ, 7. இவர்கள், 'கிரக்ஸ்' பைக்கில் வாழப்பாடி, அருநுாத்துமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு ஆத்துார் அருகே அம்மம்பாளையம், காந்திபுரம் பஸ் ஸ்டாப்பில் சென்றபோது, பெட்ரோல் போட, வடக்குபுற சாலையில் சென்றார். அப்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் சுரேஷ் உயிரிழந்தார். கவுதமி, ஆசஸ்ரீ படுகாயமடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement