சிக்கலான நிலையில் இந்தியா - கனடா உறவு; ஒப்புக்கொள்கிறார் கனடா அமைச்சர்

3

ஒட்டாவா: ''உலக அரங்கில் முக்கியமான சக்தியாக திகழும் இந்தியாவுடன் கனடாவின் உறவு சிக்கலான நிலையில் உள்ளது,'' என கனடா வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னரே, இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.



இந்நிலையில், கனடாவின் வெளிவிவகார துறை தொடர்பான கமிஷன் முன்பு அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டேவிட் மோரிசன் ஆஜராகி கூறியதாவது: கனடாவின் பிராந்திய ஒற்றுமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் கனடாவின் கொள்கை தெளிவாக உள்ளது.உலகில் ஒரே இந்தியா தான் உள்ளது என்பதிலும் தெளிவாக உள்ளோம்.


காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல நாடுகளில் உள்ளனர். கனடாவிலும் உள்ளனர். பல தசாப்தங்களாக இந்தியாவும் கனடாவும் கூட்டாளிகளாக உள்ளன. உலக அரங்கில் இந்தியா முக்கியமான சக்தியாக திகழ்கிறது. அந்நாட்டின் கொள்கைகளை கனடா கவனத்தில் எடுத்துள்ளது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவுக்காக பணியாற்றி வருகின்றன.


2023 செப்., டில்லியில் நடந்த ஜி20 மாநாடு வரை இரு நாட்டு உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. உறவானது சிக்கலான நிலையில் உள்ளது. இதனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement