காஷ்மீரில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் வனப்பகுதியில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்கப்பட்டார்.


@10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, நேற்று தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. மாநிலத்தில் பயங்கரவாத சதி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். பயங்கரவாத சதி செயலுக்கு முடிவு கட்ட வேண்டும் என அம்மாநில மக்களும் விரும்புகின்றனர்.


இந்நிலையில், இன்று (அக்.,09) அனந்த்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகளால் இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டனர். இருப்பினும், 2 ராணுவ வீரர்களில் ஒருவர் தப்பித்து திரும்பி வந்து விட்டார். சிறிது நேரத்தில், காணாமல் போன ராணுவ வீரர் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடம் இருந்த துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே மாவட்டத்தில் தற்போது ராணுவ வீரர் கடத்தப்பட்டிருப்பது, அவர்கள் மூவரையும் விடுவிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement