சாம்சங் போராட்டம்! நானும் தொழிலாளி முழக்கம்! ஸ்டாலினை 'வாரிய' இ.பி.எஸ்.

1

சென்னை; போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க திராணியின்றி, அடக்குமுறையால் தமிழக அரசு ஒடுக்க முயல்தாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலை தள பதிவு விவரம் வருமாறு;

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் தி.மு.க., அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?

போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டு கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இ.பி.எஸ்., தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.

Advertisement