நடுவானில் விமானிக்கு மாரடைப்பு; விமானத்தை தரையிறக்கிய மனைவி

லாஸ்வேகாஸ்: அமெரிக்காவில் 5,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி அந்த விமானத்தை தரையிறக்கினார். இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம், அந்த பெண்ணுக்கு விமானத்தை இயக்க தெரியாது என்பது தான்.

அமெரிக்காவின் லாஸ் வேகாசை சேர்ந்த தொழிலதிபர் எலியாட் ஆல்பெர்.(78) இவர், மனைவி யுவோனி கினானே வெல்ஸ்(60) உடன் சிறிய விமானத்தில் பயணித்தார். விமானம் 5,900 கி.மீ., தூரம் சென்ற நிலையில் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், மனைவிக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.


அவரிடம் பேசிய அதிகாரிகளிடம், தனக்கு விமானத்தை இயக்க தெரியாது எனக்கூறி அவர்களுக்கும் திகிலை ஏற்படுத்தினார். உடனடியாக சுதாரித்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்குவது குறித்து ஒவ்வவொரு நடவடிக்கையாக பொறுமையாக கூறினர். அதன்படியே , யுவோனி கினானே வெல்சும் செயல்பட்டு விமானத்தை மெதுவாக அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கினார். அவருக்கு போதிய முன் அனுபவம் இல்லாததால், விமானத்தை தரையிறக்க அங்கிருந்த 11 ஆயிரம் அடி நீள ஓடுபாதையையும் அவர் பயன்படுத்தினார். ஒரு வழியாக விமானம் நின்றதும் அவசர கால ஊழியர்கள் விமானத்திற்கு விரைந்து வந்து எலியாட் ஆல்பெரை பரிசோதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து விமான நிலைய இயக்குநர் கூறுகையில், '' இந்த நிகழ்வு எதிர்பாராதது. இதுபோன்று எனது வாழ்க்கையில் பார்த்ததுகிடையாது,'' என்றார்.

Advertisement