14,000 சதுர அடியில் அமைகிறது கண்ணகி நகரில் சமுதாய கூடம்

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில், பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை, சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரில் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு குடியேறி உள்ளனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.

அதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை இணைந்து, இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதற்காக, 'ஸ்பாஞ்ச் கொலாப்ரேட்டிவ்' அமைப்பு வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் கண்ணகி நகர் மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்னைகள், அதற்கு தீர்வு அளிப்பதற்கான திட்டங்கள் குறித்த தகவல்கள்திரட்டப்பட்டன.

இதன் அடிப்படையில், இங்கு முதற்கட்டமாக அங்காடி வளாகம், ஒருங்கிணைந்த சமுதாய நலக் கூடம் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இங்கு, 14,000 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான வரைவு திட்டம், வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது.

நிதி ஒதுக்கீடு சார்ந்த விசயங்களில் முடிவு எடுத்தபின், இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement