லஞ்சப்பணத்துடன் சிக்கினார் பெண் சார் பதிவாளர்: 13 லட்சம் ரூபாய் பறிமுதல்

1

கோவை: பதிவு செய்த பத்திரத்தை விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளர் பூபதி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சார் பதிவாளர் காரில் கணக்கில் வராத ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றார். பத்திரப்பதிவு முடித்த நிலையில் தனது அசல் பத்திரங்களை விடுவிக்க கோரினார். பத்திரத்தை விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் கேட்டார்.

இதன்படி, கருப்புசாமியிடம் இருந்து ரூ.35 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை , லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணையில், நான்சி நித்யா கரோலின் கூறியதன் பேரில் லஞ்சம் வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் காரில் இருந்த கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement