கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை:சொந்த பயன்பாட்டுக்கு நிதியை பயன்படுத்தியதாகக் கூறி, கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி தீர்வு ஆணைய உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீநிஷா என்பவர் தாக்கல் செய்த மனு:

அறிவியல், மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் கல்லுாரிகளை துவங்கி, மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்கு, கடந்த 1984ல் லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் கீழ் இயங்கி வரும் கல்லுாரிகள் வாயிலாக வரும் வருமானங்கள் அனைத்தும், அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016ல், அறக்கட்டளை நிர்வாகிகள் வீடு, அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் சிலவற்றை வருமான வரித்துறை கைப்பற்றியது. பின், 2017ல் வருமான வரித்துறை உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீசில், 2011-- - -12 மற்றும் 2016 - -17ம் ஆண்டுகளில் பெறப்பட்ட வருமான விபரங்களை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கு அறக்கட்டளை தரப்பில், 'கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு, கல்லுாரிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல், கல்வி சார்ந்த பணிகளுக்காகவே செலவழிக்கப்பட்டது' என, நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கல்லுாரிக்கு நன்கொடை வசூலித்ததாகவோ, நிதியை தவறாக பயன்படுத்தியதாகவோ, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. கல்வி பயன்பாட்டுக்கு மட்டுமே நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த ஆகஸ்ட் 30ல் அறக்கட்டளை பதிவை ரத்து செய்து, வருமான வரி தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பதிவை ரத்து செய்ததால், கல்லுாரிகள் செயல்பட முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, வருமான வரி தீர்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement