சுருளியாற்றை யார் துார்வாருவது நீர்வளத்துறையா, வனத்துறையா; கழிவுகளால் ஆற்றில் அசுத்தமான சூழல்

கம்பம் : சுருளியாற்றை யார் தூர்வாருவது நீர்வளத்துறையா, வனத்துறையா என கேள்வி எழுந்துள்ளது. இரு துறைகளும் கண்டு கொள்ளாததால் கழிவு பொருட்களால் ஆறு மாசுபட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் சுருளி ஆறு தான் கம்பம் பள்ளத்தாக்கின் பாசனம்,குடிநீருக்கு பயன்பட்டு வந்துள்ளது. மேகமலை பகுதியில் உருவாகும் சுருளியாறு தற்போதுள்ள அருவி வழியாகவும், வண்ணாத்தி பாறை வழியாகவும் வருகிறது.

இந்த ஆற்றின் நீரை வைத்து சுருளியாறு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இன்றைக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே மின் நிலையமாகும்.

சுருளி அருவியில் துவங்கும் ஆறு செடி கொடிகள் வளர்ந்துபுதர்மண்டி ஆறு இருக்கும் இடம் தெரியாமல் உருமாறி வருகிறது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வெள்ள நீர் எளிதாகசெல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆறு புதர் மண்டி அதன் நிஜத்தை இழந்து நிற்கிறது. தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்கள் வீசும் ஆடைகளும், கழிவுபொருள்களும் ஆற்றில் நிரம்பி அசுத்தமான சூழல் உள்ளது. இதனால் அருவியில் நீராட வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

சுருளியாற்றை தூர்வாருவது எங்கள் வேலையல்ல என்று வனத்துறை கூறுகிறது. நீர்வளத்துறை தூர்வார சென்றால் வனத்துறையினர் ஆயிரம் கேள்வி கேட்பார்கள் என கூறி பொறுப்பை தட்டி கழிக்கின்றனர்.

சுருளியாறு எந்த துறை கட்டுப்பாட்டில் உள்ளது என தெரியாத நிலை உள்ளது. கலெக்டர் ஷஜீவனா புதர் மண்டி தன் நிஜத்தை இழந்து வரும் சுருளியாற்றை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Advertisement