பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது; கிழக்காசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

5

லாவோஸ்: மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது, என்றும் அவர் கூறினார்.


கிழக்கு ஆசிய நாடுகளின் 19வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மோதல்கள் வளரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும். பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது. நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்தவன். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அனைவரும் மதிப்பு அளிக்க வேண்டும்.

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் ஒரு கடுமையான சவாலாகவும் உள்ளது. அதை எதிர்கொள்ள, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்திய யாகி என்ற அழிவுகரமான வெப்பமண்டல சூறாவளியால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.




மியான்மரின் நிலைமைக்கு ஆசியான் அணுகுமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், மனிதாபிமான உதவியைப் பேணுவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவற்றின் மத்தியில் பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement