3 ரவுடிகளை போலீஸ் கொன்றது ஏன் மனித உரிமை ஆணையம் விசாரணை

1

சென்னை : சென்னையில் நடந்த மூன்று, 'என்கவுன்டர்'கள் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.


சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின், ரவுடிகளுக்கு எதிராக, போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கேற்ப, சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அருண், 'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என்று கூறினார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் மனைவி, பெற்றோரை சந்தித்து எச்சரிக்கை செய்தனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, விசாரணையில் இருந்த ரவுடி திருவேங்கடம், மாதவரம் அருகே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற போது தற்காப்புக்காக அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து, வியாசர்பாடியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்பவர், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். அவரும் போலீசாரை துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு குண்டுகள் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடி மற்றும் கதவை துளைத்து விட்டன. அதனால், தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டதில், காக்காதோப்பு பாலாஜியின் உயிர் பிரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்த பின், அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய, நீலாங்கரை அருகே அழைத்துச் சென்றோம். அப்போது, போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.

சம்பவ இடத்தில் இருந்த இன்ஸ்பெக்டர், தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்து விட்டதாக, போலீசார் காரணம் கூறினார். இந்த மூன்று என்கவுன்டர்கள் நடந்த விதம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

Advertisement