ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை: கொந்தளிக்கிறார் ராகுல்

46

புதுடில்லி: 'ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.


கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே, இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் 3 நாட்களாக நின்று கொண்டிருந்துள்ளது. இது குறித்து 3 நாட்களாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.



ராகுல் கண்டனம்



இந்நிலையில், சமூகவலைதளத்தில், ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசா பாலாசூர் பயங்கர விபத்தை பிரதிபலிக்கிறது. பயணிகள் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியிருந்தாலும், மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும். இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement