இண்டியா கூட்டணியினர் வந்தால் நல்லாயிருக்கும்! உமர் பதவியேற்பு விழாவில் காங்., ஆசை

4

ஸ்ரீநகர்: உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் ஒட்டுமொத்த இண்டியா கூட்டணியினரும் கலந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா தெரிவித்துள்ளார்.



ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும், பா.ஜ., 29 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரசுக்கு 6 இடங்கள் கிடைத்தது. பெரும் வெற்றி பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந் நிலையில் பதவியேற்பு விழாவில் ஒட்டுமொத்த இண்டியா கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; உமர் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தை அளித்துள்ளோம். அவர் வரும் 14ம் தேதி பதவியேற்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் கவர்னரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

பதவியேற்பு விழாவின் போது ஒட்டுமொத்த இண்டியா கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டால் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement