மழை நீர் சேகரிப்புக்கு மெகா திட்டம்; செயல்படுத்துகிறது மத்திய அரசு!

13


புதுடில்லி: மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், தண்ணீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

நாடு முழுவதும் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்கிறது. சேமித்து வைக்காத காரணத்தினால், கோடை காலங்களில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க மத்திய , மாநில அரசுகள் தண்ணீரை சேமிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதன் ஒரு பகுதியாக மழைநீரை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், ' ஜல் சஞ்சய் ஜன் பகிதரி'( தண்ணீர் சேகரிப்பு, பொது மக்கள் பங்கேற்பு) என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் குஜராத்தில் துவக்கி வைத்தார்.


இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் 5 மழை நீர் சேகரிப்பு திட்டங்களை உருவாக்கி மழை நீர் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே மாநகராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் இடங்களில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்.


இத்திட்டம் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளதால், நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், கிணறுகள் உள்ளிட்டவை மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


இது தொடர்பாக ஜல்சக்தித்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், மழை நீர் சேகரிப்பு என்பது அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சிவில் அமைப்புகள் மூலம் செய்யப்படும் கூட்டு முயற்சியாகும். இதன் மூலம் எதிர்காலத்திற்கான தண்ணீர் சேமிப்பு உறுதி செய்யப்படும். அனைத்து அரசுகள் மற்றும் சமூகங்கள் ஒன்று சேர்ந்த ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement