விஷமருந்தி கைதி தற்கொலை: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ், 46; தன் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை கைதியாக, புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, உடல்நல குறைவு காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரமேஷ் கடந்த 5ம் தேதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது பக்கத்து படுக்கையில், விஷம் அருந்தியதற்காக ஏற்கனவே ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரின் படுக்கை அருகில், அவர் அருந்திய பூச்சிக்கொல்லி மருந்தின் மாதிரியை டாக்டர்களிடம் காண்பிக்க, உறவினர்கள் வைத்திருந்தனர். அந்த பூச்சிக்கொல்லி மருந்தை ரமேஷ் அருந்தி மயங்கினார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

ரமேஷ் பலியானதன் எதிரொலியாக, அரசு மருத்துவமனையில் சிறைக்கைதி வார்டு முன் பணியில் இருந்த போலீசார் நவநீதகிருஷ்ணன், 43, வல்லரசு, 40, ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

Advertisement