17 வயது சிறுமி கர்ப்பம்: தாய், கணவர் உட்பட நால்வர் மீது போக்சோ வழக்கு

தேனி: தேனியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் டிரைவர் அருண்குமார் 22, சிறுமியின் தாய், மாமனார் பரமன் 55, மாமியார் பேச்சியம்மாள் 40, ஆகியோர் மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.

தேனி 17 வயது சிறுமி 8 முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து விட்டு ஜவுளிகடையில் பணிபுரிந்தார். அப்போது சிறுமியை உறவினர் டிரைவர் அருண்குமார் 22, காதலித்தார். பின் சிறுமியும், அருண்குமாரும் கடந்தாண்டு திருமணம் செய்தனர்.

அருண்குமார் தந்தை பரமன் 55, தாய் பேச்சியம்மாள் 40, இருவரையும் ஏற்றுக் கொண்டனர்.

சிறுமியும், கணவரும் தேனி அருகே உள்ள சிறுமியின் வீட்டிற்கு வந்தனர். சிறுமியின் தாய் இருவரையும் திட்டினாலும் பின் அவரும் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

பிறகு சிறுமி உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக தாய் சிறுமியை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மகளிர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், கணவர் அருண்குமார், மாமியார் பேச்சியம்மாள், மாமனார் பரமன் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement