கவரைப்பேட்டை ரயில் விபத்து; சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு சம்மன்

1

சென்னை: சென்னை கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ரயில் விபத்து நடந்த இடத்தில், நட்டு, போல்டுகள் கழன்ற நிலையில் இருந்ததால், விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.


கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், விரைவு ரயிலின், 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. இந்த விபத்தில், அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.


ரயில், தொழில்நுட்ப பிரச்னையால், பிரதான பாதைக்கு பதிலாக, 'லுாப் லைன்' எனப்படும், கிளை பாதையில் மாறிச் சென்றது தான் விபத்துக்கு காரணம். விபத்து நடந்த இடத்தில், போல்,நட்டுகள் கழன்ற நிலையில் கிடந்ததால் சதி வேலை ஏதும் நடந்ததா என அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், இன்று(அக்.,14) சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே விபத்து தொடர்பாக, ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் தொழில்நுட்பம், நிலைய மேலாளர்கள், கட்டுப்பாட்டு அறை உட்பட, 13 பிரிவுகளின் பணியாளர்கள், அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement