தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு
சென்னை:தமிழகத்தில் ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புகளால், உலக பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, 25 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். மத்திய வங்கியான, 'பெடரல்' வங்கியிடம், வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க கோரிக்கை வைத்துள்ளார்.
இது போன்ற செயல்களால், உலக பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சத்தில், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், உலக சந்தையில் கடந்த ஒரே வாரத்தில் 31.10 கிராம் எடை கொண்ட அவுன்ஸ் தங்கம் விலை 8,600 ரூபாய் உயர்ந்து, 2.41 லட்சம் ரூபாயானது. அந்த உயர்வு நம் நாட்டிலும் எதிரொலிக்கிறது. விலை மேலும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.